Sunday, September 9

யானோ, ஈழத்து தமிழன்!


 
உறங்கி விழிக்கும்,
ஒவ்வொரு காலையும்,
உயிர் என்னிடம் இருப்பதை
எண்ணி பெரும்மூச்சுவிட்டு,
பாதித்தூங்கி, தூங்கா நிலையில்,
பிறந்த காலம் முதலாய்
யானும்,

இதோ இன்றும் நீண்டது
எனது விடியா இரவு,
மெய்யும் உயிரும் ஒன்றாய்,
தலையும் உடலும் முழுதாய்,
கையும், காலும் நன்றாய்,
கண்கள், செவிகள் இயல்பாய்,
எல்லாம் அப்படியே
உள்ளது உள்ளபடியே,
துப்பாக்கி குண்டுகள்
கண்டிராத எனது உயிரும்,
வெடிகுண்டு வேட்டையில்
சிதறாத எனது உடலும்,
நானும் - எல்லாம்
நன்றாய் இருந்தும்
அனாதையாய்,

என்னுடன் இருந்தவரெல்லாம்,
இன்று மண்ணுடன் மண்ணாய்,
காலொன்றும், கை ஒன்றுமாய்,
தலை வேறு, உடல் வேறாய்,
குண்டுகள் சலித்த சல்லடை உடலாய்,
பருந்திற்க்கும், கழுகிற்க்குமாய்
மூவேளை விருந்து படையலாய்,
லட்சக்கணக்கில் மொத்தமாய்
என்னை விட்டே மாண்டாறோ,
தமிழனுக்கு வந்த சோதனையோ,
இதுவும்,
இல்லை தமிழுக்கு வந்த
சோதனையோ?

எங்களை மீட்டிட போராடிய
அண்ணனும் எங்களுடன் இல்லையே
இன்று,
யார் எங்களை காத்திடுவாறோ?
யார் எங்களை மீட்டிடுவாறோ?
தமிழீழம் வெறும் கனவோ?

தெரியா கேள்வியுடன்.
புரியாமல் புலருகிறது,
ஒவ்வொரு காலையும்,
கலக்கத்துடனே,

கலங்கி நிற்ப்பவன் யானோ,
ஈழத்து தமிழன்!


---------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
---------------------------------------------

No comments: