Friday, September 13

சிட்டுக் குருவி, சிரிக்கும் குருவிகள் நீங்கள் ....


ஜூலை` 20

பட்டம் விடும் வானில் தினம்
பறந்து திரிந்து, சிரித்த கூட்டம்,
வீட்டு விட்டம் நடுவே கூடமைத்து 
கொஞ்சி மகிழ்ந்து நெகிழ்ந்த காலம், 
ஜன்னல் கம்பி ஊஞ்சல் ஆடி 
பயந்து பறந்து மறைந்த நேரம்,
ஒவ்வொன்றாய் காணொளியாய் 
இன்றென் மன வானில் ஓடுதிங்கே,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

காலையில் தினம் எனையெழுப்பும்
இயற்க்கை இடர் எச்சரிக்கை நீங்கள்,
துயரென்னை துயில்கொள்ள விடாசமயம்
தூரயிருந்தே துயிலச்செய்யும் குழாம் நீங்கள்,
தோட்ட அணில்கள் துள்ளித்திரிய துரத்தி
துரத்தி விளையாடி களித்து, களைத்த நீங்கள்,
முற்ற வாசல் வழி நுழைந்து அடுக்களை
இடுக்கெல்லாம் சிதறிய சோறுண்ட நீங்கள்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

அலைப்பேசி கோபுரங்கள் நகர்முழுதும்
நாளொன்றுக்கு நாநூராய் பெருகியதே அதனாலா,
ஞாயிறுப் புகா காடுகள் எல்லாம்
அடுக்குமாடி வீடுகளை மாறியதே அதனாலா,
ஏரிகளில் கூட நீரில்லையே, நதியிங்கு
நுழைந்தோட வழியில்லையே அதனாலா, அதனாலா
எதனால் என்று சொல்வேனோ நானும்
உங்களை இனியும் காண்பேனோ யானும்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

சிட்டுக் குருவி, சிரிக்கும் குருவிகள் நீங்கள்
சில்வண்டாய் பறந்தோடி சிவக்கும் குருவிகள் நீங்கள்,
கணினியில் காட்டும் வரைப்படமா நீங்கள்
அலைப்பேசியில் கேட்கும் இசையோ உங்கள் கீச்சல்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே.


#எழுத்தோலை!

No comments: